முசாபர்நகர்,
உத்தரபிரதேசத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. இதில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக காப்பி அடித்ததை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளரே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
எனவே இது குறித்த புகாரின் பேரில் தேர்வு மைய கண்காணிப்பாளர் யோகேந்தர் பால் மற்றும் 14 மேற்பார்வையாளர்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
அதை ஏற்று யோகேந்தர் பால் உள்ளிட்ட 17 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அஜய் சங்கர் பாண்டே நேற்று உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.