போபால்,
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் சமையல் வேலைக்காக 10-க்கும் மேற்பட்டோர் ஒரு ஆட்டோவில் சமையல் வேலை நடைபெறும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அளவுக்கு அதிகமான பயணிகளுடன் அந்த ஆட்டோ குவாலியரின் பூரணி ஷவானி என்ற பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் மறுபுறம் வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 13 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மத்தியபிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.