தேசிய செய்திகள்

பெற்ற தாய் இறந்த செய்தி அறிந்தும் உடனே செல்லாமல் 15 கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர்

உத்தரபிரதேசத்தின் மதுராவில், பெற்ற தாய் இறந்த செய்தி அறிந்தும் உடனே செல்லாமல் 15 கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர்.

மதுரா,

உத்தரபிரதேசத்தின் மதுராவில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் பிரபாத் யாதவ் (வயது 33). கொரோனா நோயாளிகளை வீடுகளில் இருந்து அழைத்து வந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பது இவரது பணி.

இந்த நிலையில் பிரபாத் இரவு பணியில் இருந்தபோது, சொந்த கிராமத்தில் இருந்த அவரது தாயார் மரணம் அடைந்தார். இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் அழைப்புகள் வந்துகொண்டே இருந்த அந்த பரபரப்பான இரவில் பிரபாத், பணியிலிருந்து பாதியில் செல்லவில்லை.

இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன்பிறகே 200 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள தனது கிராமத்துக்கு புறப்பட்டார். மேலும் தாயின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் அஜய் சிங் கூறும்போது, தாயாரின் இறுதிச்சடங்குக்கு பிறகு சில நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறினேன். ஆனால் அவர் நோயாளிகளுக்கு உதவ விரும்பியதால் பணிக்கு திரும்ப சம்மதித்தேன். பிரபாத் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர் என்றார்.

கடந்த ஆண்டு ஜூலையில் பிரபாத்தின் தந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். அப்போதும் தந்தையின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு அவர் பணிக்கு திரும்பினார் என்பது நினைவுகூரத்தக்கது.