தேசிய செய்திகள்

விலைவாசி உயர்வை கண்டித்து மராட்டியத்தில் 15 நாள் போராட்டம்: காங்கிரஸ்

விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் 15 நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

வேலையிழப்பு

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக சாதாரண மக்கள் தீபாவளியை கொண்டாடுவது கடினமாகிவிட்டது. விலைவாசி உயர்ந்து உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் மத்திய அரசு இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.

விழிப்புணர்வு பிரசாரம்

எனவே காங்கிரஸ் கட்சி மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசை தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்காக அடுத்த மாதம்(நவம்பர்) 14-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை 15 நாட்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும் மக்களிடம் பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.