புதுடெல்லி,
புதுடெல்லி முனிர்கா பகுதியில் நள்ளிரவு பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தலைமையில் நடைபெற்ற சோதனையின் போது நேபாளம் நாட்டை சேர்ந்த 16 பெண்கள் மீட்கப்பட்டனர். 20 முதல் 40 வயதுடைய பெண்கள் 16 பேர் இந்தியாவில் வேலை என்று நேபாளத்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களுடைய பாஸ்போர்ட் அனைத்தையும் மோசடி கும்பல் ஒன்று பறித்து வைத்துக்கொண்டு, அவர்களை சிறிய அறை ஒன்றில் அடைத்துள்ளது. அவர்களை வளைகுடா நாடுகளுக்கு கடத்துவதற்கான பணிகளை செய்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் பெண்கள் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவாள் இரவு 1 மணியளவில் சோதனையில் ஈடுபட்டு பெண்களை மீட்டுள்ளார்.
இதற்கிடையே இதுபோன்ற அழைத்து வரப்பட்ட 7 பெண்கள் கடந்த 15 நாட்களில் ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது என பெண்கள் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. பெண்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டவனை தேடி வருகிறோம் என கூறியுள்ளது. சுவாலி மாலிவால் பேசுகையில், பெண்களை நாங்கள் மீட்ட பகுதி காவல் நிலையம் அமைந்துள்ள 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இவ்வளவு அருகே இருந்தும் பெண்கள் கடத்தப்படுவது தொடர்பாக தகவல் அறியாமல் போலீஸ் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, என்று கூறியுள்ளார்.
டெல்லியில் பெண்களுக்கு என்று உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பல முறை கடிதம் எழுதியுள்ளேன். கமிட்டி ஒரு மாதத்திற்கு இரண்டு முறை கூட வேண்டும். டெல்லியில் மனிதர்களை கடத்தும் கும்பல் பெரிய அளவில் செயல்படுகிறது, இதுதொடர்பாக விசாரணையை முன்னெடுத்து குற்றவாளிகளை கைது செய்து தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் சுவாதி மாலிவால்.