பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடக்கிறது. இதற்காக நேற்று காலையில் விமான சாகச ஒத்திகை நடைபெற்றது.
அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 சூர்யகிரண் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன. இதனால் 2 விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தன.
முன்னதாக 2 விமானங்களில் இருந்த 3 விமானிகள் அவசர காலத்தில் பயன்படுத்தக்கூடிய பாராசூட் விசையை அழுத்தி கீழே குதித்தனர். இதில் கீழே விழுந்த ஒரு விமானி படுகாயம் அடைந்து பலியானார். மற்ற 2 விமானிகளும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் அங்கிருந்த மக்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்த விமானிகள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீப்பிடித்து எரிந்த விமானங்கள் மீது தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு விசாரணை நடத்த உள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 1-ந் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிரஜ்-2000 வகையை சேர்ந்த போர் விமானம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பியபோது திடீரென்று கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 விமானிகள் உடல் கருகி இறந்தனர். தற்போது 2-வது முறையாக ஒரே மாதத்தில் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.