புதுடெல்லி,
அரபிக்கடலின் வடமேற்கு பகுதியில் ஏற்கனவே நிலை கொண்டிருந்த கியார் என்ற புயல் மிகவும் தீவிரம் அடைந்து நேற்றுமுன்தினம் சூப்பர் புயலாக மாறியது. இந்த புயல் சற்று பலவீனம் அடைந்து நேற்று தீவிர புயல் ஆனது.
இந்தநிலையில், திருவனந்தபுரத்துக்கு தென்மேற்கே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று மாலை புயலாக மாறியதாகவும், அதற்கு மஹா என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மகாபத்ரா நேற்று தெரிவித்தார்.
வழக்கமாக வங்காள விரிகுடா கடலில்தான் ஒரே சமயத்தில் 2 புயல்கள் உருவாகும் என்றும், ஆனால் தற்போது அரபிக்கடல் பகுதியில் இரு புயல்கள் உருவாகி இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மஹா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லட்சத்தீவு பகுதியை கடந்து செல்லும் என்று கூறிய மிருத்யுஞ்சய் மகாபத்ரா, நவம்பர் 2-ந் தேதிக்குள் இந்த புயல் மேலும் தீவிரம் அடையும் என்றும், இதன் காரணமாக இரு நாட்களுக்கு கேரளா, லட்சத்தீவு, கடலோர கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.