மும்பை,
போர் நடந்து வரும் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டு வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் மைக்கோலைவ் நகரில் உள்ள துறைமுகத்தில் 21 இந்திய சிப்பந்திகளுடன் சரக்கு கப்பல் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட சரக்கு கப்பலை இயக்கி வரும், மும்பையை சேர்ந்த வி.ஆர். மரிடைம் கப்பல் ஏஜென்சி நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சய் பிரசார் கூறியதாவது:-
தற்போது சரக்கு கப்பல் உக்ரைனின் மைக்கோலைவ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் கப்பலுடன் சோத்து மொத்தம் அங்கு 25 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற கப்பல்களிலும் இந்தியர்கள் உள்ளனர். தற்போது வரை எங்கள் சிப்பந்திகளும், கப்பலும் பாதுகாப்பாக உள்ளது. கப்பலில் இணையதளம், செயற்கைகோள் தொடர்புகள் செயல்பாட்டில் உள்ளது.
சிப்பந்திகள் எங்களுடனும், அவர்களின் குடும்பத்தினருடனும் தொடர்பில் உள்ளனர். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி மைக்கோலைவ் துறைமுகம் செயல்படவில்லை. கருங்கடல் கடலோர துறைமுகத்திற்கு அருகில் ரஷிய படைகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரஷிய படைகள் உள்ளே வந்து கப்பல்களை செல்ல அனுமதித்தால் நன்றாக இருக்கும். அல்லது நமக்கு துறைமுக ஆணையம் உதவி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.