தேசிய செய்திகள்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 21 ஆயிரம் வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 21 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகம், உத்தரபிரதேசம், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, மராட்டியம், கேரளா, குஜராத், சத்தீஷ்கார், திரிபுரா, மணிப்பூர் ஆகிய 11 மாநிலங்களில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 488 வீடுகள் கட்ட மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 2 லட்சத்து 34 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழகத்தில் 20 ஆயிரத்து 794 வீடுகளும், ஆந்திராவில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 559 வீடுகளும், மத்தியபிரதேசத்தில் 74 ஆயிரத்து 631 வீடுகளும் கட்டப்பட உள்ளன.

இந்த தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட, மழை-வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு விதிமுறைகளை தளர்த்தி ரூ.486 கோடியே 87 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT