தேசிய செய்திகள்

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் - பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 23 அங்கீகார மற்ற போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது:-

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும் உள்ளன.

கேரளா, கர்நாடகா, மராட்டியம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு அங்கீகாரமற்ற பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், கர்நாடகாவில் பாதகாவி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் யூனிவர்சிட்டி, மராட்டியத்தில் ராஜா அரபிக் யூனிவர்சிட்டி ஆகியவை அங்கீகாரமற்றவை. இவ்வாறு ரஜினிஷ் ஜெயின் கூறினார்.

SCROLL FOR NEXT