கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள்: மாநில அரசு ஏற்பாடு

கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனையும் அதிகளவில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் அங்கு 16-ந் தேதியும், 17-ந் தேதியும் (இன்றும், நாளையும்) 2.5 லட்சம் கொரோனா மாதிரிகளை பரிசோதிக்க மாநில அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இது குறித்து அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயன் குறிப்பிடுகையில், கொரோனா மாதிரிகள் பரிசோதனைக்கு தேவையான விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், பரிசோதனை இலக்குகளை முழுமையாக அடைந்து காட்டுமாறு கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் பணிகளில் முக்கிய பங்கு எடுத்தவர்கள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே கேரளாவில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு 100 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி இனி 75 ஆகவும், திறந்தவெளியில் நடக்கிற நிகழ்ச்சிகளில் 200 பேர் கலந்து கொள்ள வழங்கப்பட்ட அனுமதி இனி 150 ஆகவும் குறைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT