புதுடெல்லி,
கொரோனா பேரிடரால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு ரெயில் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. எனினும் சரக்கு ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.
உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று சேர்க்கும் பணியை சரக்கு ரெயில் சேவை தொடர்ந்து வருகிறது. இதேபோன்று ஊரடங்கை முன்னிட்டு பேருந்து சேவையும் முடக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு ரெயில் மற்றும் பேருந்து சேவை குறைந்த எண்ணிக்கையில் தொடங்கப்பட்டது.
வடமாநிலங்களில் அதிக குளிர் காணப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கடும் பனி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் தெளிவற்ற வானிலை காணப்படுவதுடன், வாகனங்கள் சாலையில் செல்வதில் இடையூறு ஏற்பட்டு உள்ளது. காற்றின் தர குறியீடு அளவும் மோசமடைந்து உள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் 27 ரெயில்கள் தெளிவற்ற வானிலை மற்றும் பிற இயக்க காரணங்களுக்காக காலதாமதமுடன் வந்து சேரும் என வடக்கு ரெயில்வே இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தெளிவற்ற வானிலை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் காலையில் பணிக்கு செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. வாகனங்கள் சாலையில் செல்லும்பொழுது, குறைந்த தொலைவுக்கே தெளிவாக தெரிகிறது. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.