தேசிய செய்திகள்

இந்தியாவில் 3½ கோடி மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 3½ கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில், கடந்த 23-ந் தேதிவரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மக்கள்தொகைக்கு 26 ஆயிரத்து 106 பேர் என்ற விகிதத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துவிட்டது. குணமடைந்தவர்கள் விகிதம் 75 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில், கொரோனாவுக்கு பலியானோர் விகிதம் 1.85 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்களை உரிய நேரத்தில் கண்டறிந்து, பரிசோதனை நடத்தி, சிகிச்சை அளிப்பதுதான், கொரோனா மீட்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.