தேசிய செய்திகள்

மராட்டியம்: சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி 3 பேர் படுகாயம்

காரை இளம்பெண்ணின் நண்பனான சிறுவன் ஓட்டியுள்ளான்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையின் அக்ரிபடா பகுதியை சேர்ந்த தொழிலதிபருக்கு 18 வயதில் பேத்தி உள்ளார்.

இந்நிலையில், அந்த இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பனான 17 வயது சிறுவனுடன் தொழிலதிபரான தாத்தாவின் பென்ஸ் சொகுசு காரில் சென்றுள்ளனர். காரை இளம்பெண்ணின் நண்பனான சிறுவன் ஓட்டியுள்ளான்.

தெற்கு மும்பையில் டிஎம் மர்க் அருகே கடற்கரை சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் சிறுவன் காரை வேகமாக ஓட்டியுள்ளான்.

அப்போது சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீது சிறுவன் ஓட்டிய சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் விபத்துக்குள்ளான காரில் பயணித்த மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.