ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் லோகர்தகா மாவட்டத்தில் உள்ள பகேகரா கிராமத்தில் பக்ரு பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அந்த பகுதியை இன்று மதியம் 2.45 மணிக்கு சி.ஆர்.பி.எப். படையின் 158வது மற்றும் 214வது பட்டாலியன் வீரர்கள் மற்றும் மாநில போலீசாரும் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் நக்சலைட்டுகள் 3 பேர் பலியாகினர். அவர்கள் பயன்படுத்திய ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் சில வெடிபொருட்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
அங்கு மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.