பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு மண்டல அதிகாரி ஒருவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
கடந்த ஆண்டு (2020) கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ரெயில் பெட்டிகளை சிகிச்சை அளிக்கும் பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பெங்களூரு உள்பட 3 மண்டலங்களில் 320 ரெயில் பெட்டிகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெட்டிகளாக மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை.
இதனால் கடந்த ஆண்டு இறுதியில் அந்த பெட்டிகள் காய்கறிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா 2-வது அலை தொடங்கிய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அந்த ரெயில் பெட்டிகளை தயார்படுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி 320 ரெயில் பெட்டிகளிலும் சானிடைசர் திரவம் தெளித்து சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.