புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி சுமார் 3.75 லட்சம் பேர் (3,74,397) விபத்துகளில் உயிரிழந்து உள்ளனர். இதில் சாலை விபத்துகளில் மட்டுமே 35 சதவீதத்துக்கு அதிகமானோர், அதாவது 1,33,201 பேர் உயிரிழந்து உள்ளனர். 3.35 லட்சம் பேர் காயமடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த 3.54 லட்சம் சாலை விபத்துகளில் 60 சதவீத்ததுக்கு அதிகமான விபத்துகள் அதிக வேகத்தால் ஏற்பட்டதாகும். இந்த சாலை விபத்துகளில் 59.6 சதவீத சம்பவங்கள் கிராமப்புறங்களில் நடந்துள்ளன.
ரெயில்வேயை பொறுத்தவரை, கடந்த ஆண்டு நடந்த 13,018 விபத்துகளில் 11,968 உயிர்கள் பறிபோயுள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு சுமார் 3.75 லட்சம் பேர் விபத்துகளில் உயிரிழந்திருந்தாலும், முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் (4.21 லட்சம்) இது குறைவு என்பது சற்றே ஆறுதலாகும்.