மும்பை,
மராட்டியத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து காரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்ததால் அது 3-வது அலையாக கருதப்பட்டது. இதில் ஒரு வாரத்திற்கு முன் வரை பாதிப்பு உச்சத்தில் இருந்தது. மாநிலத்தில் ஒரே நாளில் சுமார் 47 ஆயிரம் பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் 27 ஆயிரத்து 971 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் கொரோனா 3-வது அலை குறையத்தொடங்கி உள்ளதாக மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தினசரி கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக குறைந்து உள்ளது. இதில் இருந்து கொரோனா 3-வது அலை குறைவது போல தெரிகிறது. முன்பு மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவானது. தற்போது நாசிக், நாக்பூர், புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. லேசான அறிகுறிகள் மட்டும் இருந்தால், நோய் பாதித்தவர்கள் 7, 8 நாட்களில் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுகிறார்கள்." என்றார்.