தேசிய செய்திகள்

லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிப்பு; பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. உறவினர் உள்பட 4 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் மணல் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வின் உறவினர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். #BJPMLA

பண்டா,

உத்தர பிரதேசத்தில் மணல் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கர்தல் சாலை அருகே 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எஸ்.பி. ஷாலினி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நாராயணி தொகுதியின் எம்.எல்.ஏ. ராஜ்கரண் கபீரின் உறவினர் என தெரிய வந்துள்ளது என கூறியுள்ளார். இதுபற்றி எம்.எல்.ஏ. கூறும்பொழுது, எனக்கு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை எஸ்.பி. ஷாலினி இலக்காக வைத்து செயல்படுகிறார்.

சமீபத்தில் எனது பிரதிநிதியான நந்த் கிஷோர் பிரம்மசாரி மீது போலி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இப்பொழுது எனது உறவினரை அவர் கைது செய்துள்ளார். முதல் மந்திரி யோகியை சந்தித்து உண்மையை அவரிடம் கூறுவேன் என எம்.எல்.ஏ. கரண் கூறியுள்ளார்.