தேசிய செய்திகள்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 4 பேர் சாவு

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 4 பேர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் அங்கு கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது. கள்ளச்சாராயத்தால் உயிர்ப்பலி ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.

அம்மாநிலத்தின் கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரன் மாவட்டங்களில் தீபாவளி முதல் இதுவரை கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 33 ஆக உள்ளது.

இந்நிலையில், சமஷ்டிபூர் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்த மேலும் 4 பேர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களில் ஒரு ராணுவ வீரரும், ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரரும் அடங்குவர்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர், கள்ளச்சாராய பாட்டில்களை கொண்டுவந்துள்ளனர். ஒரு துக்க நிகழ்வுக்கு சென்ற சிலர், பின்னர் அந்த கள்ளச்சாராயத்தை பருகியுள்ளனர். உடனடியாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்களில் 4 பேர் இறந்துவிட்டனர். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.