சண்டிகர்:
அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து, நால்டா கிராமத்தின் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. பின்னர் சாலையில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கை கால்களில் பலத்த அடிபட்டது.
இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் பிஜ்னோர் மருத்துவமனை மற்றும் செக்டார் சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒரு பெண் பயணியின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சண்டிகர் பி.ஜி.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது, சாலையின் மோசமான நிலை போன்ற காரணங்களால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.