தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல்; ரூ.400 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

5 மாநில தேர்தலுடன், 6 மாநிலங்களுக்கு இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

புதுடெல்லி

நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ந்தேதி பிற்பகலில் அறிவித்தது. அவற்றுடன் 6 மாநிலங்களுக்கு இடைத்தேர்தலையும் நடத்துகிறது.

இதனை தொடர்ந்து, கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை, மின்னணு பறிமுதல் மேலாண்மை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.408.82 கோடி அளவுக்கு சட்டவிரோத பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அவற்றில் ரூ.17.44 கோடி மதிப்பிலான பணம், ரூ.37.68 கோடி மதிப்பிலான மதுபானம் (16.3 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக), ரூ.167.38 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், ரூ.23 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற நகைகள் மற்றும் ரூ.163.30 கோடி மதிப்பிலான பிற இலவச பொருட்களும் அடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.