புதுடெல்லி,
கர்நாடகாவில் தலித்துகள் மற்றும் பழங்குடியினத்தினை சேர்ந்த 16 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 52 பேர் அடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர் என ஊடக தகவல் வெளியானது. அவர்கள் நாள் ஒன்றுக்கு 19 மணிநேரம் ஊதியம் எதுவுமின்றி பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும் நடந்து வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தனது கட்சி தொண்டர்களை துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவும்படி கேட்டு கொண்டார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தலித் மற்றும் பழங்குடி மக்கள் அடிமைகளாக உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. மனிதநேயமற்ற முறையில் அவர்கள் பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசானது அமைச்சரவை விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது. மக்கள் கவனித்து கொண்டுள்ளனர். துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவிடும்படி தொண்டர்களை நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.