Image Courtesy : ANI 
தேசிய செய்திகள்

"5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்" - பிரதமர் மோடி

5ஜி தொழில்நுட்ப சேவை, நமது நாட்டில் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் மோடி கூறினார்.

காந்திநகர்,

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது, குஜராத்தில் உள்ள காந்திநகர், ஜுகநாத், ராஜ்கோட், கேவடியா மற்றும் வியாரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு ரூ.15,670 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

அந்த வகையில் காந்திநகரில் உள்ள அதலஜ் பகுதியில், குஜராத் அரசின் 'சிறந்த பள்ளிகளுக்கான இயக்கம்' என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய பிரதமர் மோடி, குஜராத் அரசின் இந்த திட்டத்தின் மூலம் அந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள், கணிணி ஆய்வகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட 5ஜி தொழில்நுட்ப சேவை, நமது நாட்டில் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று அவர் கூறினார். அதே போல் ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான், ஆங்கிலம் தெரியாததால் யாரும் தங்கள் லட்சியத்தை அடைய முடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே கல்வி பயிலும் வகையில் புதிய கல்விக் கொள்கை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT