லக்னோ,
உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் நேற்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடியில் இணைந்தனர். இவர்கள் 6 பேரும் கடந்த ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளரை எதிர்த்ததால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இதைப்போல சீதாபூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகேஷ் ரத்தோரும் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், தன்னை சமாஜ்வாடியில் இணைத்துக்கொண்டார். இவரும் ஏற்கனவே கட்சித்தலைமையையும், பிரதமர் மோடியையும் விமர்சித்ததால் பா.ஜனதாவில் ஓரங்கட்டப்பட்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்களித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என கடுமையாக சாடிய அவர், எனவே இந்த தேர்தலில் அந்த கட்சி விரட்டியடிக்கப்படும் என்று தெரிவித்தார். இதைப்போல காங்கிரசையும் குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடியினருக்கு காங்கிரசும், பா.ஜனதாவும் ஒன்றுதான் எனக்கூறினார்.