ஹல்தியா
மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், மேற்கு வங்காளத்தின் ஹல்தியா நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, 7-வது ஊதிய குழு அமைப்பது, நம்பிக்கைக்குரிய சூழலை உருவாக்குவதற்கு உறுதியளிப்பது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசினார்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நடந்த ஊழல், பணமோசடி மற்றும் பெண்கள் தொடர்பான குற்றங்கள் ஆகியவை மீண்டும் விசாரிக்கப்படும் என அவர் உறுதி கூறினார். பா.ஜ.க. அரசு மாநிலத்தில் ஆட்சியமைத்த பின்னர், சட்டத்தின் பிடியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் குண்டர்கள் ஒருவரும் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
அவர் வெளியிட்ட 6 உத்தரவாதங்களின்படி,
1) மேற்கு வங்காளத்தில் அச்ச சூழலை பா.ஜ.க. அரசு நீக்கும், சட்டத்தின் ஆட்சிக்கான நம்பிக்கையை மீட்டெடுப்போம்.
2) பொதுமக்களுக்கு முழு அளவில் பதிலளிக்க கூடிய பொறுப்பான நிர்வாகம் செயல்படும்.
3) ஒவ்வொரு பணமோசடி, ஊழல், நம்முடைய மகள்களுக்கு எதிரான அநீதி, ஒவ்வொரு பாலியல் பலாத்கார வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படும்.
4) திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் சிறையில் இருப்பார்கள். அது, மந்திரியாகவோ அல்லது காவலாளியாகவோ இருப்பினும் கூட சட்டம் ஒவ்வொருவரையும் கணக்கில் கொள்ளும்.
5) அரசியல் சாசனத்தின்படி, அகதிகளுக்கு ஒவ்வொரு உரிமை மற்றும் தனியுரிமைக்கான உத்தரவாதம் வழங்கப்படும். எனினும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் இந்தியாவில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
6) பா.ஜ.க. அரசு உருவானதும், 7-வது ஊதிய குழு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறினார்.