தேசிய செய்திகள்

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரெனகவல்லி பகுதியில் உள்ள கல் குவாரியில், நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கல்குவாரியில் வெடித்தது சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவமோகாவில் உள்ள கல்குவாரி ஒன்றில், கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT