புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தை மையமாக வைத்து நேற்று இரவு 7.55 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பைசாபாத்தின் 79 கி.மீ. தெற்கே பூமிக்கு அடியில் 200 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.
ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. எனினும் இதில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடபகுதியில், குறிப்பாக டெல்லியில் பயங்கரமாக உணரப்பட்டது. தலைநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நில அதிர்வுகள் உணரப்பட்டன.
இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் இந்த அதிர்வுகளால் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.