தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த பாதுகாப்பு படை

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று வழக்கம்போல இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், படுகாயமடைந்த அந்த நபர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக, அந்த நபரை கைது செய்த எல்லைப்பாதுகாப்பு படையின் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட காயத்தையடுத்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது. இந்திய எல்லைக்குள் நுழைந்தது தொடர்பாக அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.