கோழிக்கோடு,
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நிபா வைரசும் பரவ தொடங்கியுள்ளது. அங்கு நிபா வைரசுக்கு ஒரு சிறுவன் இறந்துள்ளான். இதனால் கேரளாவை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், நிபா வைரஸ் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-
நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 68 பேர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.