புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் தனித்தனியாக 5 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதன்படி, விவாகரத்து, தத்தெடுத்தல், பாதுகாவலராக இருத்தல், மரபுரிமை, பரம்பரை உடைமை, பராமரிப்பு, திருமண வயது மற்றும் ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்களில் மதம் மற்றும் பாலினத்திற்கு பொதுவான, ஒரே சீரான சட்டங்களை உறுதி செய்வதற்கான சட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதனை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
இதன்பின்பு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மேற்குறிப்பிட்ட பொது நல மனுக்கள் மீது மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிய பதிலை தெரிவிக்கும் வகையிலான விரிவான விளக்கங்களை சமர்ப்பிக்க, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு 3 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளனர்.
இந்த விவகாரங்களில் உங்களின் பார்வை என்ன? என்று சொலிசிட்டர் ஜெனரலிடம் சுப்ரீம் கோர்ட்டு அமர்வு கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த அவர், சட்டம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியிது என கூறியதுடன், ஆனால், இந்த மனுக்களை நான் ஆய்வு செய்வேன். அதற்கான அறிவுறுத்தல்களை எடுத்து கொள்ள அனுமதியுங்கள் என அவர் கூறியுள்ளார்.