புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஜிதேந்தர் சிங் தோமர் என்பவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் மாநில சட்ட மந்திரியாகவும் பதவி வகித்தார்.
இந்த தேர்தலில் தோமர் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது கல்வித்தகுதி குறித்து தவறான தகவல் கொடுத்ததாகவும், எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரியும் பா.ஜனதாவை சேர்ந்த நந்த் கிஷோர் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜீவ் சகாய், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் தோமரின் வெற்றி செல்லாது என நேற்று அறிவித்தார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திரிநகர் தொகுதியில் இருந்து தோமர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.