புதுடெல்லி,
கடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன்இ பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.
பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார். பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானி அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். சாலை மார்க்கமாக அழைத்துவரப்பட்ட அபிநந்தனை வரவேற்க வாகா - அட்டாரி எல்லையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்தும் ஆரவாரமாக அபிநந்தனை தாயகம் வரவேற்றனர்.
இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கும் விதமாக #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.