கர்னூல்,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி நகரை சேர்ந்த 18 பேர் புனித பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர்.
அந்த வேன், நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மாதாபூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென சாலை நடுவில் உள்ள தடுப்பில் ஏறிய வேன், மறுபக்கம் பாய்ந்து சென்று அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது.
அந்த வேகத்தில், வேன் நசுங்கி உருக்குலைந்து போனது. சாலை முழுவதும் ஆங்காங்கே உடல் சதைகள் சிதறின. ரத்தம் ஓடியது.
இந்த கோர விபத்தில், 14 பேர் பலியானார்கள். அவர்களில் 8 பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர்.
மேலும், 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் கர்னூலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கர்னூல் மாவட்ட கலெக்டர் வீரபாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு பாகிரப்பா ஆகியோர் விபத்து பகுதியை பார்வையிட்டனர். முதல் கட்ட விசாரணைப்படி, வேன் டிரைவர் தூக்கக் கலக்கத்தில் ஓட்டியதால் விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கூறினார். முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.