பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் எச்.கே.குமாரசாமி, கொரோனா பரவியபோது பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்னும் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு, கர்நாடகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பஸ்களும் அதாவது 100 சதவீத பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.