தேசிய செய்திகள்

நடிகர் விவேக் தனது திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் - உள்துறை அமைச்சர் அமித்ஷா

மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59. மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், நடிகர் விவேக்கின் அற்புதமான நகைச்சுவை திறன் மக்களை எப்போதும் மகிழ்வித்து வந்திருக்கிறது என்றும் தன்னுடைய திரைப்படங்களிலும் வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் தொடர்பாக தொடர்ந்து அக்கறையை செலுத்தி வந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி.

இவ்வாறு அமித்ஷா தனது இரங்கல் செய்தியை தமிழில் பதிவிட்டுள்ளார்.