கோவை,
கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமான இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். இதற்காக பிரதமர் மோடி, லக்னோவிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார் அவரை கவர்னரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றனர். கோவை ஈஷா மையம் வந்த பிரதமர் பிரதமர் மோடி தியான லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்தார். ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடி பிராத்தனை செய்தார்.
அதனை தொடர்ந்து ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். எல்லோருக்கும் வணக்கம் என தமிழில் பேசி பின்னர் ஆங்கிலத்தில் இந்தியிலும் உரையாற்றினார்.
சிலையை திறந்துவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
* ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன்.
* மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம்.
* கடவுள் எந்த வடிவில் இருந்தாலும் வழிபடுவது நமது பண்பாடு.
* வேறுபாடுகளுக்கு அப்பால் பக்தியால் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம்.
* நல்லவற்றுக்கும் போராடும் திறனை இறைவன் தருகிறார்.
* இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்பதை மகா சிவராத்திரி வலியுறுத்துகிறது.
* எங்கே கடவுள் இருந்தாலும், அதோடு சேர்ந்து விலங்கையும், பறவையையும் போற்றுவது நம் வழக்கம்.
* எல்லா திசைகளிலிருந்தும் புதிய சிந்தனைகளை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.
* பழமை என்பதற்காக, கண்மூடித்தனமாக போற்றுவதும், தூற்றுவதும் தவறு.அதிலுள்ள சரி, தவறுகளை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
* பட கடவுள்கள் இருந்தாலும் மகாதேவன் ஒருவரே.
* நான்...நாம்..என்ற நிலையை அடைய யோகா உதவுகிறது.
* ஒரு ஜீவனை சிவனாக்குவது யோகாப்பயிற்சி.
* ஒரு ஜீவாத்மாவை பரமாத்மாவாக மாற்றுகிறது யோகா.
* சிவன் பார்வதி ஒற்றுமை இமயம் குமரி ஒற்றுமையை போன்றது.
* பழமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுப்பித்துகொள்கிறோம்.
* காசி முதல் கோவை வரை சிவபெருமான் நம்மை இணைத்துள்ளார்.
* மொழிகள் பல இருக்கலாம், ஆனால் ஆன்மிகம் ஒன்றுதான்.
* எல்லா மனிதர்களின் இதயத்திலும் ஆன்மிகம் குடிகொண்டிருக்கிறது.
* உணர்விலிருந்து சிவனுக்கு அழைத்து செல்லும் கிரியா ஊக்கியாக யோகா விளங்குகிறது. யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமையை உணர முடியும்.
* ஆண்களின் தெய்வீகத்தன்மை நிபந்தனைக்கு உட்பட்டது.
* பெண்கள் இயல்பிலேயே தெய்வீக தன்மை உடையவர்களின் என முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
* நாகரீக உலகில் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
* அத்தனை அழுத்தங்களிலிருந்தும் வெளிகொண்டு வரும் ஒரே நிவாரணி யோகா.
* அமைதியின்மையை காரணம் காட்டி மது,போதையை நாடுபவர்களை எண்ணி வருந்துகிறேன்.
* உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் வித்தியாசம் உண்டு.
* சிந்தனை,செயல்,ஞானம் அத்தனையின் முன்னேற்ற தன்மையையும் யோகா வழங்குகிறது.
* ஒட்டுமொத்த உலகமும் அந்த தினத்தில் ஒன்றுபட்டு நிற்பது,யோகாவின் வலிமையை காட்டுகிறது.
* யோகா தான் நோய்களிலிருந்து விடுதலையை பெற்றுத்தரும்.
* உலகத்திற்கு நன்கொடையாக யோகா கலையை இந்தியா அளித்துள்ளது.
* யோகா கலையை காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது
* ஜூன் 21-ம்தேதி சர்வதேச யோகா தினமாக கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
* அனைவருக்கும் நன்றி வணக்கம் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த விழாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விழா நடக்கும் இடத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.