ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் மக்வால் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப் சிங். பாகிஸ்தானில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 1992-ம் ஆண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு, தான் லாகூர் சிறையில் இருப்பதாகவும், தனக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குல்தீப் சிங் தனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதினார்.
இந்த சூழிலில் கடந்த 8 ஆண்டுகளாக குல்தீப் சிங்கிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என குடும்பத்தினர் கவலைக்குள்ளாகினர்.
இந்த நிலையில் 29 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு 53 வயதில் குல்தீப் சிங் அண்மையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
அங்கு பட்டாசுகள் வெடித்தும், மலர்களை தூவியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.