மங்களூரு,
மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தட்சிண கன்னடா, கார்வார், சிவமொக்கா ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மட்டும் தான் கன்னடத்தை சரியாக பேசவும், எழுதவும் செய்கிறார்கள். மற்ற மாவட்ட மக்கள் கன்னடத்தை சரியாக பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை. கன்னட மொழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல்கள் பரவின.
இதைதொடர்ந்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கன்னட மொழியை அவமதித்து விட்டதாக சில கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே சமீபத்தில் சமூக வலைத்தளமான முகநூலில்(பேஸ்புக்) ஒரு பதிவிட்டுள்ளார். அதில் நான் கன்னட மொழிக்கு எதிரானவன் அல்ல. நான் தாய்மொழியான கன்னடம் மீது மிகுந்த பற்று கொண்டவன். கன்னட மொழியை காப்பதும், வளர்ப்பதும் என் கடமை. நான் கூறிய கருத்து முற்றிலும் சரியானது தான். ஆனால் அதை ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன. ஒருவேளை நான் கூறிய கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.