புதுடெல்லி,
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில், நீட் தேர்வு எழுத வயது வரம்பை தளர்த்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது. இந்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், பொதுப்பிரிவைச் சேர்ந்த 25-வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தது எனவும், நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஒருவார காலத்திற்கு நீட்டிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரை நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் நிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இடைக்கால சலுகை அளிக்கப்பட்டுள்ளது.