பெங்களூரு,
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். படாரியா, கடந்த 23-ந் தேதி பெங்களூரு சென்றார். அங்கு 2 நாட்கள் இங்கு தங்கியிருந்த அவர் எச்.ஏ.எல்., ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போர் விமான சோதனை மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். தொடக்க செயல்பாட்டு அனுமதிக்கான தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் (எல்.சி.ஏ.) அவர் பறந்து ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் அந்த தேஜஸ் விமான செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் தொடக்க செயல்பாட்டு அனுமதி குறித்த தகவல்கள், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்த தகவல்களை அங்கிருந்த அதிகாரிகள் எடுத்து கூறினர். அங்கு படாரியா பேசும்போது, "போர் விமான பரிசோதனை மையத்தின் பணிகள் சவாலானது. இந்திய விமானப்படையின் செயல்பாட்டு மையத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவும், திட்டங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கவும் இந்த பரிசோதனை மையத்தினர் தங்களின் ஆற்றல், அனுபவத்தை முழுமையான அளவில் பயன்படுத்த வேண்டியது அவசியம்" என்றார்.