மும்பை,
மும்பையில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 4 தினங்களாக மும்பையில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையை தாண்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக குறிப்பிட்ட இடத்திற்குள் நிற்க முடியாமல் விமானம் தாண்டிச்சென்றதாக தெரிகிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து மும்பைக்கு வந்த வந்த விமானம், பிரதான ஓடுபாதை கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளதால், மாற்று ஓடுபாதையில் தரையிறங்கிய போது ,இச்சம்பவம் நேரிட்டுள்ளது. விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் இச்சம்பவம் பற்றி கூறும் போது, விமானம் சரியான இடத்தில் தரையிறங்கிய போது, கனமழை காரணமாக ஓடுபாதை வழுக்கும் நிலையில் இருந்ததால், அதிகபட்ச பிரேக் சிஸ்டத்தை பயன்படுத்திய போதும், விமானத்தை ஸ்டாப்வேயில் மட்டுமே நிறுத்த முடிந்தது என்று தெரிவித்துள்ளார். விமானத்துக்கோ, விமான நிலையத்துக்கோ எந்த வித சேதமும் இல்லை எனவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.