புதுடெல்லி,
ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த முறைகேடு தொடர்பாக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கப்பிரிவு ப.சிதம்பரத்திடம் ஏற்கனவே 3 முறை விசாரணை நடத்தி உள்ளது. கடைசியாக கடந்த மாதம் 24-ந் தேதி அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 4-வது முறையாக நேற்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு வந்த அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 2 முறை விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.