மும்பை,
மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தார். இது மராட்டியத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சித்தலைவரும், அஜித்பவாரின் சித்தப்பாவுமான சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அஜித்பவாரின் மரணம் மராட்டியத்துக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. கடினமாக உழைக்கும் மற்றும் திறமையான ஒரு தலைவரை மராட்டியம் இழந்துவிட்டது. இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது. எல்லா விஷயங்களும் நம் கையில் இல்லை.
இந்த சம்பவத்தில் ஏதோ அரசியல் சம்பந்தப்பட்டிருப்பதாக கொல்கத்தாவில் இருந்து ஒரு கருத்து பரப்பப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. இதில் அரசியல் எதுவும் இல்லை. இது ஒரு விபத்து. இதில் அரசியலை கொண்டு வரவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அஜித்பவாரின் மரணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தவேண்டும் என்று மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.