மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போதுய் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார் (வயத் 67), மராட்டிய துணை முதல்-மந்திரியாக 6 முறை பதவி வகித்தவர் ஆவார். மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அஜித் பவார் இருந்துள்ளார். சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித் பவார் தனித்து செயல்பட்டார். அவரது பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மராட்டியத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித் பவாரின் கட்சி உள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விமான விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், "நான் அதை என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையானது. விமானம் கீழே இறங்கும்போது, அது விபத்துக்குள்ளாகும் என்று தோன்றியது. பின்னர் அது தரையில் மோதி பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, நாங்கள் இங்கு விரைந்து சென்று விமானம் தீப்பிடித்து எரிவதைக் கண்டோம். விமானத்தில் மீண்டும் 4-5 முறை வெடிப்புகள் ஏற்பட்டன. மேலும் பலர் இங்கு வந்தனர், அவர்கள் விமானத்தின் உள்ள இருந்தவர்களை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால் இது ஒரு பெரிய தீ விபத்து என்பதால், மக்களால் உதவ முடியவில்லை. அஜித் பவார் விமானத்தில் இருந்தார், இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று தெரிவித்தார்.