தேசிய செய்திகள்

ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை அனைத்து ரெயில் சேவைகளும் தற்காலிக ரத்து

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மே 3ந்தேதி வரை அனைத்து ரெயில் சேவைகளும் தற்காலிக ரத்து நீட்டிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து ரெயில், விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் ரெயில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த கட்டணம் முழுவதும் பொதுமக்களிடம் திரும்ப வழங்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் (ஏப்ரல் 15ந்தேதி) ரெயில் போக்குவரத்து தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், நாட்டு மக்களிடம் இன்று காலை பேசிய பிரதமர் மோடி, வரும் 3ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள், புறநகர், கொல்கத்தா மெட்ரோ ரெயில், கொங்கன் ரெயில்வே உள்ளிட்ட பயணிகளுக்கான அனைத்து ரெயில் சேவைகளும் வரும் மே 3ந்தேதி வரை தற்காலிக ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளது.