மும்பை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாள் பயணமாக மராட்டியம் செல்கிறார். நாளை அவர் அகமத்நகரில் உள்ள ஷீரடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். மேலும் அன்று லோனியில் நடைபெறும் விழாவில் வித்தல்ராவ் விகே பாட்டீல் இலக்கிய விருதுகளை வழங்குகிறார்.
நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) புனேயில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில்(சி.எப்.எஸ். எல்) புதிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். இதேபோல புனே உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார்.
மேலும் அங்குள்ள தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் கடந்த மாதம் மறைந்த பிரபல வரலாற்று ஆசிரியர் பாபாசாகேப் புரந்தரேவின் இல்லத்திற்கும் செல்கிறார். மேலும் புனேயில் பா.ஜனதா நிர்வாகிகளையும் சந்திப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.