தேசிய செய்திகள்

முழு அடைப்பில் 10 மாதங்களில் சதம் அடித்த கேரளா இன்றும் முழு அடைப்பு

முழு அடைப்பில் 10 மாதங்களில் கேரள மாநிலம் சதம் அடித்து உள்ளது. இன்றும் முழு அடைப்பு. காங்கிரஸ் கூட்டணி விடுத்த முழு அடைப்புப் போராட்டம் இன்று நடந்து வருகிறது.

கேரளாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக, காங்கிரஸ் கூட்டணி விடுத்த முழு அடைப்புப் போராட்டம் இன்று நடந்துவருகிறது.

பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாகக் கூறி, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பம்ப்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப்பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. தேனி மாவட்டம் வழியாக செல்லும் பேருந்துகள் குமுளி, கம்பம்மெட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

இன்று காங்கிரஸ் நடத்திய முழு அடைப்பை தொடர்ந்து கேரளாவில் கடந்த 10 மாதங்களில் நடந்த முழு அடைப்பு போராட்டங்கள் 100-யை தொட்டு உள்ளது. கடவுளின் சொந்த நாடு என்ற பெயர் பெற்ற கேரள முழு அடைப்பின் சொந்த நாடாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

அங்குள்ள ஊடகங்களின் தகவல் படி கடந்த 10 மாதங்களில் 99 முழு அடைப்பு நடத்தப்பட்டு இருந்தது. காங்கிரஸ் அறிவித்த இன்றைய முழு அடைப்பு அடிப்படையில் 100 ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இது இரண்டு மாநிலங்களின் கடையடைப்பை கணக்கில் கொணடது ஆகும்

அதிகபடசமாக ஜூன் மாதம்21கடையடைப்பு நடத்தபட்டு உள்ளது. ஜூலை மாதம் 19, ஜனவரி மாதம் 17 முழு அடைப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த முழு அடைப்புகளுக்கு மாநில அரசியல் வன்முறையே காரணம் என கூறப்படுகிறது. சிபிஎம்-பா.ஜ.க. மோதல்கள் தொடர்பாக 30 முழு அடைப்பு நடத்தப்பட்டன.

பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியால் 38 முழு அடைப்புகளும், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் தலா 14 முழு அடைப்புகளும் நடத்தப்பட்டு உள்ளன.