தேசிய செய்திகள்

ஆந்திரா: கலப்பட பால் குடித்ததில் 4 பேர் பலி; முதல்-மந்திரி இழப்பீடு அறிவிப்பு

முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அமராவதி

ஆந்திர பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை என்ற பெயரில் அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் அங்கீகாரம் பெறாத வகையில், பால் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் சப்ளை செய்த, அன்றாட அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பாலில் கலப்படம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த கலப்பட பாலை குடித்ததில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 106 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கணேஸ்வரை போலீசார் விசாரணைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் சட்டசபையில் பேசும்போது, இந்த சோக சம்பவம் பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் பாலில் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என தெரிய வந்தால், அதனை அரசு புறந்தள்ளாது என கூறினார்.

சிகிச்சை பெறுவோரின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என கூறிய அவர் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.