புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் 25 இடங்களில் 22 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இதனால் மக்களவையில் 4-வது பெரிய கட்சி என்ற நிலையைப் பெற்றுள்ளது. அத்துடன் சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று, ஆந்திரா முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவரது முக்கிய செயல் திட்டம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதுதான்.
ஆனால், கடந்த முறை அ.தி.மு.க.வுக்கு வழங்கிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை இந்த முறை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்க பா.ஜனதா தலைமை முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த பதவியைப் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் விரும்பவில்லை.
இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், எங்களுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி தேவை இல்லை. அது ஆளுங்கூட்டணியில் சேர்ந்தது போலாகி விடும். தவிரவும் அந்த பதவியால் எந்த பலனும் இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரையில் அதை ஏற்க மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டை பா.ஜனதா கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டோம் என்றார்.